ஆன்மிக தகவல் – திரௌபதியம்மன் கோயில் துரியோதனன் படுகளம்..! குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..

Rate this post

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த  திருவிடந்தை தெற்குப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திரௌபதி அம்மன் கோவில் திருவிழா

செங்கல்பட்டு  ( Chengalpattu News ) : திரௌபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த் திருவிழா என்பது மிக விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்களான செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா மிக முக்கிய விழாவாக இருந்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் திரௌபதி அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

துரியோதனன் படுகள நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த திருவிடந்தை தெற்குப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயிலில், துரியோதனன் படுகள நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து10 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு 9:00 மணிக்கு, ஜலக்கிரீடை, சுமத்திரை திருமணம், பகடை ஆடுதல், கர்ணன் தூது, துகில் உரிதல், அபிமன்யூ சண்டை, அர்ஜுனன் தபசு, கர்ணன் போர் என, மகாபாரத தெருக்கூத்து நாடகங்களும் நடைபெற்றது.

தெருக்கூத்து கலைஞர்கள்

விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனனை வதம் செய்து, திரௌபதி அம்மனுக்கு கூந்தல் முடிக்கும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தெருக்கூத்து நாடக கலைஞர்கள் இந்நிகழ்ச்சியை தத்துரூபமாக நடத்திக் காட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அழிந்து வரும் கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலைஞர்கள், மகாபாரத நாடகத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டியது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

You may also like...