Bharani Deepam Benefits
Bharani Deepam Benefits

பரணி தீபம் 2024 : வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும் எந்த நேரத்தில் எப்படி விளக்கு ஏற்றினால் பாவம் தீரும்

5/5 (10)

கோவிலில் மட்டுமல்லாது வீடுகளிலும் திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் பரணி தீபம் ஏற்றப்பட வேண்டும். இதற்கு என்ன காரணம், பரணி தீபம் ஏற்றும் முறை எப்படி வந்தது, வீட்டில் பரணி தீபம் ஏற்றுவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும், இந்த ஆண்டு பரணி தீபம் எப்போது வருகிறது, இந்த நாளில் வீட்டில் எப்படி பரணி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பரணி தீபம்

கார்த்திகை மாதமே தீபங்களுக்குரிய மாதமாகும். இந்த மாதம் முழுவதும் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் திருக்கார்த்திகை துவங்கி மூன்று நாட்கள் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். உண்மையில் திருக்கார்த்திகைக்கு முதல் நாள் பரணி தீபம், திருக்கார்த்திகை அன்று தீபம், திருக்கார்த்திகைக்கு மறுநாள் பாஞ்சராத்திர தீபம் என மூன்று நாட்கள் விளக்கு ஏற்றுவதே சரியான முறையாகும். இதில் பரணி தீபம் எமதர்ம ராஜாவிற்காகவும், திருக்கார்த்திகை தீபம் சிவ பெருமானுக்காகவும், பாஞ்சராத்திர தீபம் பெருமாளுக்காவும் ஏற்றுகிறோம்.

பரணி தீபம் எதற்காக ஏற்றப்படுகிறது

சிவ பெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்த திருநாளையே திருக்கார்த்திகை தீபமாக கொண்டாடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் ஜோதி வடிவமாக தோன்றி பெருமாள் உலகை காத்ததை போற்றும் வகையில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்படுவதும் தெரியும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றுவார்கள் என்பது தெரியும். ஆனால் வீடுகளில் எதற்காக பரணி தீபம், அதுவும் எமதர்ம ராஜாவிற்காக ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் வரும். எமன் என்றால் அனைவருக்கும் பயம் தான் வரும். அவரை எதற்காக வழிபட வேண்டும் என்று கேட்க தோன்றும். இதற்கு புராணத்தில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

பரணி தீபம் தோன்றிய கதை

நசிகேதன் என்பவரின் தந்தை யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகம் நடத்தும் போது தேவர்களுக்கு அவர்கள் வேண்டிய பொருட்களை தானமாக கொடுத்து வந்தார். இதை கண்டு குழப்பமடைந்த நசிகேதன் தனது தந்தையிடம் சென்று, “எதற்காக இப்படி தேவர்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படியே கொடுத்தால் எனக்கு என்று கடைசியில் என்ன இருக்கும்? விட்டால் யாராவது வந்து கேட்டால் என்னையும் தானமாக கொடுத்து விடுவீர்கள் போலவே” என கோபமாக கேட்டுள்ளான். இதை கேட்ட அவரது தந்தை, “ஆம். உண்மையும் தானமாக கொடுக்க போகிறேன்” என்றார். இதை கேட்டு மேலும் கோபமடைந்த நசிகேதன், “என்னை யாருக்கு தானமாக கொடுக்க போறீர்கள்?” என கேட்க, அவரது தந்தையோ, “எமனுக்கு உன்னை தானமாக கொடுக்கிறேன்” என கூறி தானமாக கொடுத்து விட்டார்.

பரணி தீபம் ஏற்ற காரணம்

தந்தை தானமாக கொடுத்ததால் உயிருடனேயே எமலோகத்திற்கு சென்றான் நசிகேதன். அங்கு மனிதர்கள் படும் துன்பங்களை கண்டு பயமும், குழப்பமும் அடைந்த நசிகேதன், அது பற்றி எமதர்ம ராஜாவிடம் பலவிதமான கேள்விகள் கேட்கிறான். “மனிதர்கள் பூமியில் தான் பல விதமான துன்பங்கள் என்றால் இங்கும் அவர்களுக்கு துன்பம் தானா?” என கேட்கிறான். அதற்கு பதிலளித்த எமதர்ம ராஜா, அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ற தண்டனை என்றார். இது போன்ற துன்பங்களில் இருந்து விடுபட என்ன தான் தீர்வு என்று கேட்கிறான். அவனுக்கு தர்மங்களை எடுத்துச் சொல்கிறார் எமதர்மராஜா. மனிதர்கள் தெரியாமல் செய்த பாவங்கள் தீருவதற்கு என்ன செய்ய வேண்டும் என எமதர்ம ராஜா கூறி வழிகளில் ஒன்று தான் பரணி தீபம்.

பரணி தீப நன்மைகள்

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று எவர் ஒருவர் தீபம் ஏற்றி வழிபடுகிறாரோ அவரும், அவரது முன்னோர்கள் மற்றும் சந்ததியினர் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, யமவாதனை இன்றி நலமுடன் வாழ்வார்கள் என்றார். அது மட்டுமல்ல, மார்கழி மாதம் என்பத தேவர்களின் விடியற்காலை என சொல்லப்படுவதால் அதற்கு முன்பு வரும் கார்த்திகை மாதம் அவர்களுக்கு இருளாக இருக்கும். அந்த சமயத்தில் நாம் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவதால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கி, தேவர்களின் அருள் கிடைக்கும். குறிப்பாக மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

பரணி தீபம் 2024 தேதி, வீட்டில் ஏற்றும் முறை

இந்த ஆண்டு பரணி தீபம் டிசம்பர் 12ம் தேதியன்று வியாழக்கிழமை வருகிறது. டிசம்பர் 12ம் தேதி காலை 08.20 மணி துவங்கி, டிசம்பர் 13ம் தேதி காலை 06.50 மணி வரை பரணி நட்சத்திரம் உள்ளது. யமதர்ம ராஜாவிற்கு பிரியமான பரணி நட்சத்திரம் அன்று, நாம் வாழும் போதும், வாழ்க்கைக்கு பிறகும் துன்பம் இல்லாமல் வாழ மாலை 6 மணிக்கு பிறகு விளக்கேற்ற வேண்டும். இது பஞ்சபூத தத்துவத்தையும் உள்ளடக்கியதாகும். உலகில் உள்ள பஞ்சபூதங்களும், நம்முடைய உடலில் உள்ள பஞ்சபூதங்களும் ஒழுங்காக செயல்பட குறைந்தபட்சம் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். ஒரு தாம்பூலத்தில் கோலமிட்டு, அனைத்து திசைகளையும் பார்த்தவாறு வட்டவடிவமாக 5 நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் தீபங்களுடன் சேர்த்து இந்த ஐந்து தீபங்களையும் ஏற்ற வேண்டும். மனைப்பலகையில் கோலமிட்டு, அதன் மீதும் இந்த விளக்குகளை ஏற்றலாம்.

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Comments are closed