TAMIL NADU LOK SABHA

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது

5/5 - (3 votes)

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அதற்கான 18வது மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், அதற்கான தேதி அட்டவணை இன்று (மார்ச் 16) இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டைப் போலவே, இந்த தேர்தலும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலின்போதே தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டு உள்ள விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றே விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

நிகழ்வுதேதி
வேட்பு மனு தாக்கல்மார்ச் 20
வேட்பு மனு கடைசி நாள்மார்ச் 27
வேட்பு மனு பரிசீலனைமார்ச் 28
வாக்குப் பதிவுஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கைஜூன் 4

அதன்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகள் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 96.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக லைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இதில், 49.7 கோடி ஆண் வாக்காளர்களும், 47.1 கோடி பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 19.47 கோடி பேர் என்றும், இதில் முதல்முறை வாக்களிக்க உள்ளவர்கள் மட்டும் 1.8 கோடி பேர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் கூறினார். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் பணியில் 1.5 கோடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

85 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிக்க வழிவகை செய்துள்ளதாக தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர், அவர்கள் நாட்டில் எந்த பகுதியில் இருந்தாலும் வாக்களிக்கலாம் என்றார். தேர்தலை பொறுத்தவரை ஆள் பலம், பண பலம், வதந்தி மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிய 4 பிரச்னைகளும் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக ராஜீவ் குமார் தெரிவித்தார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்களில் மாலை 6 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது, அனைத்து விமான நிலையங்களில் வருமான வரித்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அத்துடன், ரயில் நிலையங்கள், சாலைகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபடுவர் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

Related Post