Komatha worship

கோடி புண்ணியம் தரும் கோமாதா வழிபாடு

Rate this post

பசுவைத் தவிர,உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு.ஒரு பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி,தொழுவத்தில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் ஒரு பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின், முன்னோர்களில் 7 தலைமுறையினர் முக்தியடைவார்களாம்.

பசுவின் உடலில் சகல தெய்வங்களும் உறைவதால் ஆண்டுக்கு ஒருமுறையாவது கோபூஜை செய்ய வேண்டும்.பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர்
வரம் அருளியிருக்கிறார்

பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர்.தினமும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும்.தினமும் இப்படி செய்ய இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்; முன்னோர்களின் ஆசியும் கிட்டும்.

பசுவின் பின் பக்கத்தைத் தரிசிக்க வேண்டும். அதனால் லட்சுமியைத் தரிசித்த புண்ணியம் ஏற்ப்படும்.மேலும் அந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டால் கங்கையில் நீராடிய புண்ணியமும் ஏற்படும் . பசுவின் பாதத்துளி மேலே பட்டால் வாயவ்ய ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

தேவர்கள் முனிவர்கள் புண்ணிய நதிகள் சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்து வணங்கிய பலன் ஏற்படும்.

“கோ பிராமனேப்ய சுபமஸ்து நித்யம்லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்ற ஸ்லோகத்தின் படி பசுவை அதி காலையில் பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியமாகும்.பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.தினமும் பசுவை வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.

வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா பணக் கஷ்டம் நீங்கும்.ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும். சனி தோஷம் விலக சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது.

சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும். நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும். ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்கும்

பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும். ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம். பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும்.

பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும். பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.

பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள். மா ” என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும். மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ருத்யு , எமன்,எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை.

அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது. உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது”உபய தோமுகி” என்னும் பூஜை செய்து தான் பின் கட்டடம் கட்டுவார்கள். ‘‘உபய தோமுகி’’ என்பது கன்றை ஈனும் ஒரு பசு ஆகும்.

பசு ஈனும் போது கன்றின் முன்னங்கால்களும் தலையும் தான் முதலில் வரும். கன்று போடும் காலத்தில் இவ்வாறு இரு பக்கமும் தலையுடைய பசுவை ‘‘உபய தோமுகி’’ என்று சொல்வார்கள். அப்பொழுது அந்த பசுவை வலம் வந்து வழிபட வேண்டும்.

மாட்டின் வயிற்றில் இருந்து கன்று வெளிப்படும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியாக நினைத்து வணங்கியும், ஆசீர்வாதமும் செய்வார்கள். அப்பொழுது 3 முறை வலம் வந்து வணங்கி தங்களுக்கு என்ன பிரச்சினைகள் தீரவில்லையோ அது விரைவில் தீர்ந்து நல்ல வழி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் பயன் உறுதியாக விரைவில் கிடைக்கும்.

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வம்சமாகவே இன்று உலகில் உள்ள எல்லா பசுக்களும் உள்ளன பசு தானம் மிக சிறப்பிக்கப்படுகிறது. ஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நக்ஷத்திரத்திலும் கோதானம் செய்வதும், கோபூஜை செய்வதும் மேன்மை தரும்.

பசுதானம் செய்பவர்களுக்கு கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும். கோசாலை உள்ள கோவில்களுக்கு பால் கறக்கும் பசுவையும் கன்றினையும் அளித்தால் கோடி புண்ணியம் கிட்டுவதுடன், அவர்களது வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும். பசுவையும் கன்றையும் ஓராண்டு பராமரிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதும் சாலச் சிறந்தது

பசுவின் வாலைத் தொட்டுக் கும்பிட்டாலே வந்த தடைகள் விலகும். கோவில்களில் அதிகாலை நேரம் நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் குடிகொள்ளும். அமாவாசையன்று பருத்திக் கொட்டைப் பாலில் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுப்பது மிகுந்த புண்ணியம். எந்தக் கிரகம் நமக்கு தீங்கு செய்கின்றதோ, அதற்குரிய கிழமையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பசுவிற்கு கொடுத்தால் கிரகப் பாதிப்புகள் அகல வழிபிறக்கும்.

நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் வாழைப்பழத்தைக் கீறி, அதன்மேல் வெல்லம் வைத்து பசுவிற்கு கொடுத்து வந்தால்
பிதுர் தோஷம், சாப – பாவ தோஷங்கள் போன்றவை விலகி,
குலம் தழைக்கும். மேலும் பாதியில் கட்டிடப்பணிகள் நின்றாலோ, கட்டிடம் கட்டுவதில் தடைகள் வந்தாலோ அந்த இடத்தில் கோமியத்தைதெளித்து பசுவையும் அந்த இடத்தைச் சுற்றிவரச் செய்தால் இல்லம் கட்டுவதில் இருந்த தடை அகலும். பசுவுடன், கன்றையும் சேர்த்து வழிபட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.

இல்லத்துப் பூஜையறையில் பசுவும் கன்றும் இணைந்த கண்ணன் படத்தைவைத்து வழிபடுவதன் மூலம் பிள்ளைச் செல்வம் உருவாக வழிபிறக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post